மேன்மக்கள் மேன்மக்களே!

வேலூர் சிறையில்
கண்ணீரால் முறையிட்ட
ஆனந்த பவனத்து
குலக்கொழுந்துக்கு,
நளினி
என்ன பதில்
சொல்லியிருக்கக் கூடும்?
தெரிந்து கொள்ள
யாருக்கும் ஆர்வம் இல்லை.
பதில் கிடக்கட்டும்.
இந்தப் புதுமை
புல்லரிக்க வைக்கவில்லையா?
குற்றவாளி
தனது குற்றத்தை உணர்ந்து
குமைய வைக்கும் கண்ணீர்...
மனங்களிடையேயான
அகழிகளை நிரப்பும்
பாதிக்கப்பட்டவர்களின்
பரிசுத்தமான கண்ணீர்...
என்ன இருந்தாலும்
மேன்மக்கள் மேன்மக்களே!
ஆனால்,
கேவலம்
அவ்வாறு
கண்ணீர் சிந்தி கதறியழும்
வாய்ப்பையேனும்
என்றைக்காவது
எமக்கு வழங்கியிருக்கிறீர்களா
எசமானர்களே...?
தகப்பன் பாசம் கூட
சீமாட்டிகளுக்குத்தான்
சொந்தமோ?
மணிப்பூரின் தாய்மார்கள்
மன்மோகன் சிங்கை சந்திக்கவும்,
நரோடா பாட்டியாவின்
இசுலாமியக் குழந்தைகள்
மோடியை கண்டு முறையிடவும்...
முறையிட அல்ல,
மனுக் கொடுப்பதேனும் சாத்தியமா?
இவற்றுக்கும்
உளவுத் துறை
உறுதுணையாய் வருமா?
சீமாட்டிகளின்
பொழுதுபோக்குகளில்
சுவாரஸ்யத்திற்கு
பஞ்சமில்லை.
அதனால்தான்
அடுத்த சில நாட்களில்
அரை மணி நேரத்திற்கு
ஒரு விவசாயி
தற்கொலை செய்து கொள்ளும்
இழவு நாட்டில்,
சற்றும் துணுக்குறாமல் நடைபெறும்
வக்கிரக் கொண்டாட்டத்தில்
அம்மையார் பிரசன்னமானார்.
வேலூர் சிறை 'த்ரில்'
அலுத்துப் போயிருக்கலாம்.
ஷாருக் கானின் அருகாமையில்
புதிய 'த்ரில்'
தேவைப்பட்டிருக்கலாம்.
அல்லது
அங்கும் கூட
அன்பிற்குரிய
அப்பா தென்பட்டிருக்கலாம்.
உண்மைதானே,
21-ஆம் நூற்றாண்டுக்கு
இந்தியாவை அழைத்துச் செல்லும்
ராஜீவின் கனவு
20-20-ல் தானே நிறைவேறுகிறது...
ஆனால்,
பிரியத்திற்கிடமற்ற
பிரியங்கா அம்மையாரே...
ஒன்றை மட்டும்
நினைவில் கொள்ளுங்கள்...
தண்ணீரை விட மட்டுமல்ல,
கண்ணீரை விடவும்
இரத்தம் அடர்த்தியானது.






7 comments:
வெகு அருமையான கவிதை..... அசுரனில் வெளியிட விரும்புகிறேன்
ராஜிவின் அமைதிப்படை ஈழத்தில் செய்த அட்டுழியங்களையும் இந்த கவிதை சுட்டியிருந்திருக்கலாம்.
ஈழத்தில் செய்த அட்டூழியங்களை சுட்டியிருக்கலாம்தான்..ஆனால், பழிக்குப் பழியா என்பார்கள், பிரியங்காவின் மன்னிக்கும் நல்ல மனசை புரிந்து நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பார்கள். இந்த வாரம் குமுதம் படித்துப் பாருங்கள்..
நளினி சொல்லியிருக்கிறார்.
"ஏறக்குறைய 50 நிமிடங்கள் என்னிடம் (பிரியங்கா) பேசினார். பேச்சு முழுக்க ஆங்கிலத்தில் இருந்தது. பேசி விட்டு போன பிறகு என் மனபாரம் குறைந்தது. நான் எந்தவிதத் தவறும் செய்யவில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார் என்பதை அவர் முகத்தில் ஏற்பட்ட புன்சிரிப்பு மூலம் தெரிந்து கொண்டேன்."
வாழைப்பழத்தில் ஊசியேற்றும் சாணக்கியப் பார்ப்பனர் ஞாநி இந்த சந்திப்பின் மூலம், "மறப்போம், மன்னிப்போம்" என்ற அண்ணாவின் வாசகத்தை மாற்றான் தோட்டத்து மல்லிகை (ஞாநியின் சொற்கள்) பிரியங்கா நிறைவேற்றி ஒரு முன்னுதாரணமாக திகழ்வதாக தொடங்கி ஓவராக, 'ஓ ' போட்டிருக்கிறார்.
கூஜாக்கள்தான் கூச்சல் போடுகிறார்கள்.ஆனால், பிரியங்கா இதுவரைக்கும் தான் ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக ஒருபோதும் சொல்லவில்லை. ஏன் சந்தித்தீர்கள் என்பதற்கு பிரியங்கா சொன்ன பதில், "coming in to terms of loss"(ஏதாவது புரிந்ததா,..இழப்பை புரிந்து கொள்கிறாராம்...)
சரி அப்படியே வைத்துக் கொள்வோம். நேரடி சம்பந்தமில்லாத, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முருகனை நேசித்த குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியை சந்திப்பதன் மூலம் இழப்பை புரிந்து கொள்ள முடியுமா? மின்சாரமில்லாத வவுனியாக் காடுகளுக்கு சென்று, நேரடியாக பிரபாகரனை சந்திக்கலாமே.
தகப்பன் பொற்பாதம் பட்டு அமைதிப்படை பிறந்தது. மகளின் பொற்பாதம் பட்டு, அமைதி பூ பூக்குமில்லையா? ஞாநி சொன்னது போல அதற்கு பிறகாவது விடுதலைப் புலிகளுக்கும், இந்திய அரசுக்கும் 'அறிவு' வரலாம். அப்படிச் செய்யாமல் வேலூர் சிறைக்கு சென்றதை எப்படி புரிந்து கொள்வது,
ஒரு 'த்ரில்' என்பதைத் தவிர? ஞாநிகளுக்கும், அவர்களது மகாராணிகளும் மட்டுமே இத்தகைய 'த்ரில்'-களை சிலாகித்துக் கொண்டிருக்க முடியும். நளினியும், நளினி போன்ற அப்பாவிகளும் மேன்மக்களின் பொழுதுபோக்குகளில் தாங்கள் மோட்சமடைந்ததாக எண்ணி பரவசப்படலாம். ஆனால், அறிவு நாணயம் உடையவர்கள் சிந்திக்க வேண்டும்.
தங்கள் தளத்தில் மறுபதிப்பு செய்தமைக்கு நன்றி தோழர் அசுரன்.
91ல் செத்துப்போன அப்பா, 17 ஆண்டுகளுக்குப் பின்னரும், இன்னும் பிரியங்காவின் நெஞ்சில் நீங்காமல் நிற்கிறார். என்னே ஒரு செண்டிமென்ட்!
நினைத்துப்பார்க்கிறேன்.
அமைதிப்படையால், கொல்லப்பட்ட பலருடைய பிள்ளைகளும் இன்றைக்கும் ஈழத்தில் நினைத்துப் பார்ப்பார்கள் தானே!
உண்மைதான நொந்தகுமாரன், ஆனால் அவர்களும் உயிரோடு இருந்தால்தானே நினைத்துப் பார்ப்பார்கள். அதனால் தான் சிங்களப் பேரினவாத அரசு அப்பிள்ளைகளுக்கு அச்சிரமத்தை கூட கொடுப்பதில்லை.
குரூர நகைச்சுவைதான்,
வேதனையான உண்மையும் கூட...
அருமையான வார்த்தைகளில் கோர்க்கப்பட்டுள்ள கவிதை.
குஜராத்தையும்,விதர்பாவையும் மேலும் சில வரிகளில் நீட்டியிருக்கலாம்.
Kindly update your Blog periodically. Everyday i logon to your blog expecting updates...
Post a Comment