Monday, January 07, 2008

சில பழைய கவிதைகள் - IV

புத்துயிர்ப்பு

இயல்பாய்
படர்ந்து விடும் விரிசல்கள்
நொடிகளில் - வளை உலகிற்குள்.

ஆனால்
உள்ளடங்கிய முஷ்டி உயருகையில்...
உத்வேகத்துடன்
உண்மைகளைப் பரிமாறுகையில்...
திரண்டு நின்று போராடுகையில்...
அன்னியங்களும்
அன்னியோன்யங்களாக
ஆழப்படும்.

வாழ்க்கை
அர்த்த்முடையதாகப் படும்,
வளை உலகம்தாண்டி வருகையில்.

3 comments:

adangamaru said...

கவிதை இயல்பாய் வந்திருக்கிறது தோழர்!

எனக்கும் இது போன்ற அனுபவம் வளை உலகில் இருக்கும் போது வந்திருக்கிறது


வாழ்த்துக்கள்

Anonymous said...

//வாழ்க்கை
அர்த்த்முடையதாகப் படும்,
வளை உலகம்தாண்டி வருகையில்//

'வலை' உலகம் தானே சரி - எழுத்துப்பிழை.

//எனக்கும் இது போன்ற அனுபவம் வளை உலகில் இருக்கும் போது வந்திருக்கிறது //

எனக்கு அப்படிப்பட்ட நல்ல அனுபவம் இல்லை.

வலையுலகம் பற்றி என் அனுபவம் - பின் தொடருகிறது

உன் பிம்பம் விழுந்தே
கணிப்பொறி
திணறும்

ஏதோ கிறுக்குவாய்
புரியாமல் போனாலும்
'ஆகா!கவிஞர் ஜனித்துவிட்டார்'
புகழ்வார்கள்

பலர் கிறுக்குவார்கள்
'புரியவில்லை' என்பாய்
உனக்கு
அறிவு பற்றாது என்பார்கள்

பூமியை புரட்டிவிடுவதாய்
எழுத்தில் மிரட்டுவார்கள்
வழியில் கிடக்கும்
கல்லைக்கூட
நகர்த்தமாட்டார்கள்

நாளடைவில் - நீயும்
பழகிப்போவாய்

காக்கைக்கூட
கவனிக்காது - உலகமே
உன்னை கவனிப்பதாய்
பிரமை கொள்வாய்

மாறி மாறி
சொறிந்து கொள்வதில்
நகங்களில்
ரத்தம் வடியும்

காலங்கள் கரையும்
பறக்க மறந்து போவாய்
உன் சிறகுகள்
துருப்பிடித்திருக்கும்

இறுதியில்
கைத்தட்டல்கள்
உன் மனதில்
எதிரொலித்துக்கொண்டேயிருக்கும்

தனியறையில்
நீ மட்டும்
சிரித்துக்கொண்டே
இருப்பாய்

- குமாரன்

Arasu Balraj said...

அது எழுத்துப்பிழையல்ல..
'வளை' என்றால் எலிவளையை குறிக்கிறது. அத்தகைய குறுகிய வட்டத்தில் வாழ்வதைக் குறிக்கிறது. 'வலை' உலகமும், 'வளை' உலகமாக இருப்பதை தங்கள் கவிதையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், பிரச்சினை 'வலையிலோ', 'வளையிலோ' அல்ல. வளைக்குள்ளிருந்து வெளி வர மறுக்கும் மனநிலையில் இருக்கிறது. அதனைப் புரிந்து கொண்டால், வலை உலகத்திலும் கூட கல்லை நகர்த்தலாம்.